I have been chanting Adithya Hrudayam Sloka by sage Agasthya. I tried to translate it in to Tamil.
களத்திலே களைப்புற்றவன் கவலை கொண்டான்
களம் இறங்கிய ராவணனைக் கண்டே----1
தேவர்களோடு தொடர் யுத்தம் காண வந்த
தெய்வப்புலவர் அகத்தியர் கூறினார் ராமனிடம்---2
திண்தோள் ராமா தெரிந்துகொள் ரகசியத்தை
இதனால் யுத்தத்தில் எதிரிகளை வெல்வாய் நீ---3
புனிதம்நிறை ஆதித்யஹ்ருதயம் களையும் எதிரிகளை
தினம் துதித்தால் தந்திடும் வெற்றியும் அழியாப்புகழும்---4
பாவம் போக்கிடும் பல்வகை நலனருளும்
துயரம் தொலைத்து கவலை களைந்து ஆயுள் கூட்டிவிடும்---5
உதிக்கின்றான் கதிரவன் அனைவர்க்கும், மதிக்கின்றார் தேவரும் அசுரரும்
தன்னொளியால் ப்ரகாசிக்கும் பகலவனே ப்ரபஞ்ச நாயகன்---6
தேவகாந்தியும் தகிக்கும் சக்தியும் தன்னுள் அடக்கி
தேவாசுர லோகங்களை காக்கின்றான் தன்னொளியால்---7
ப்ரஹ்மா, விஷ்ணு, சிவ, ஸ்கந்த, ப்ரஜாபதியும் அவனே
இந்திர, குபேர, கால, யம, சோம, வருணனும் அவனே---8
வசு, ஸாத்ய, அஸ்வினி, மருத்துகள், மனுவின் மூதாதையரும் அவனே
வாயுவாய், அக்னியாய், உள்ளிருக்கும் ப்ராணனாய், பருவகால படைப்பாளியாய் ப்ரகாசிப்பவன் அவனே---9
கிரணங்களால் உயிர் கொடுத்துக்காக்கும் கிரகம் அதிதி புத்திரன் ஆதித்யன்
பொன்விதை எழு பொற்கதிர் தரும் ஒளி நிறை பகலவன்---10
பல்லாயிரம் ஒளிக்கற்றைகள் பொன் நிற குதிரைகளாய் வெளியேறி ஒளிபடைத்து
பக்குவமாய் ஈரிருள் நீக்கி, மகிழ்ச்சிதந்து ஒளிப்பறவையாய் வானில் மின்னும்---11
ஸ்வர்ணகர்பன் பனித்துளி கரைத்து, பகலவனாய் வானில் மிளிர்கிறான்
அதிதி புத்திரன் அக்னிகர்பன் சங்கூதி துயிலெழுப்பி சோம்பலைக் களைகிறான்---12
ரிக் யஜுர் சாம வேதமறிந்தவன், ஈரிருள் நீக்கவல்ல வான அரசன்
அடர்மழையும் அவனால், நீர் நண்பனவன் குதித்துக்கடப்பான் விந்தியமலையை---13
செம்பழுப்பு நெருப்புக் கோளம், நெருங்கியன எரிக்க வல்ல மரணத்தின் மாற்றுருவம்
செங்கதிரின் செம்மைகொண்டு பாரோர்க்கு சீர்மை நல்கும் கவி---14
பாரோரை வசப்படுத்தும் பகலவனே விண்மீன்-கிரகங்களுள் முதன்மையானவன்
பன்னிரு ஆத்மாவும் ஒளியாற்றலும் பெற்ற உனை துதிக்கின்றேன்—15
வணங்குகிறேன், கிழக்கில் உதித்து மேற்கில் மறைபவனை
வணங்குகிறேன், ஒளி கிரக தலைவனை, பகலவனை---16
வெற்றியும் மங்களமும் அருளி, உலகைக் காக்கும் செங்கதிரவனே நமஸ்காரம்
கதிர்கள் ஆயிரம் பரப்பும் அதிதி மகன் ஆதித்யனே நமஸ்காரம்---17
வணங்குகிறேன், பலமும் வீரமும் நிறைந்தவனை, வண்ணமயதேகம் கொண்டவனை,
வணங்குகிறேன், தாமரையை துயிலெழுப்பும் மார்த்தண்டனை---18
ப்ரஹ்மா விஷ்ணு சிவனின் தலைவனே, உயர்சக்தியோடு ஒளிரும் ஆதித்யனே
ருத்ரரூபத்தில் ஒளிர்ந்து, ஆட்கொள்பவனே உன்னை வணங்குகிறேன்-19
அறியாமையை அழித்து, அசையாதன அசைத்து, எதிரிகளை தொலைத்து
நன்றியற்றோரை நீக்கி, நல்லொளி பரப்பும் நாயகனை வணங்குகிறேன்---20
உருக்கிய தங்கமாய் ஒளிர்பவனே, உலகை இயக்க அனல் அளிப்பவனே
இருள் விலக்குபவனே, ஒளி நிறைந்தவனே, உலக சாட்சியாய் இருப்பவனே உனக்கு நமஸ்காரம்---21
வணங்குகிறேன், அழிக்கவும் ஆக்கவும் வல்ல தெய்வத்தை
வணங்குகிறேன், கதிர்களால் நீருறிஞ்சி ஆவியாக்கி மழைபொழிபவனை---22
நித்திரையில் இருப்போருள் நிலைத்து விழித்திருப்பவனுக்கும்,
அக்னிஹோத்திரத்தின் நற்பலனாய் திகழ்பவனுக்கும் நமஸ்காரங்கள்—23
வேதங்களும் அவனே; யாகங்களும் அவனே; யாக பலன்களும் அவனே.
நடப்பவற்றை நடத்தும் அகில நாயகனும் ரவியே---24
ராகவனே ! பேரிடரில், வனத்தில், பயத்தில் பஜிப்பவனை
மூழ்கிவிடாமல் கரைத்தேற்றுவான் பகலவன்--25
தேவதலைவனை, அகில நாயகனை ஆழ்ந்த பக்தியுடன் வணங்கி
மும்முறை இதனை ஜபித்து யுத்தத்தில் வெற்றி காண்பாய்---26
வலிமை மிகு கைகளை உடையவனே, தக்க தருணத்தில் வென்றிடுவாய் ராவணனை
என்றே கூறி வந்தவழி திரும்பினார் அகஸ்திய முனி---27
பக்தனான ராகவன் பெருமைமிகு ஸ்லோகத்தைக் கேட்டு
களைந்தான் கவலைகளை, காட்சிதந்தான் மகிழ்ச்சியாக---28
சூரியனைப் பார்த்து, ஜபித்து சந்தோஷமடைந்தான்
மும்முறை அர்க்யம் அளித்து தூய்மையாகி, வில்லைக் கையில் எடுத்தான் வீரன்---29
குதூகலமாய் இருந்தவன், யுத்த களத்தில் ராவணன் நெருங்குவதைக் கண்டு
பலத்தை திரட்டி வலிமைமிகு ராக்ஷசனை அழிக்கத் தயாரானான்---30
இரவில் திரியும் அரக்க அரசனுக்கு அழிவு நெருங்கிவிட்டதை அறிந்து
மகிழ்ச்சியோடு ரவி, ராகவனைப் பார்த்து கடவுளர் நடுவில் நின்று “தாமதிக்காதே” என்றான்---31
No comments:
Post a Comment